வணக்கம் ஸ்நேகிதர்களே,
“உண்மையான நட்பு” கதையின் மூலம் பரிட்சயமானவன், நான் சதீஷ், வயது 39, சென்னையை சேர்ந்தவன். நான்கு மாதத்திற்கு முன்னர் நான் எழுதிய “உண்மையான நட்பு” கதைக்கு, ஏராளமான நல்லுள்ளங்கள், எனக்கு மின்னஞ்சல் மூலம் ஆறுதல் கூறியும், பாராட்டுகளும் தெரிவித்திருந்தனர். அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். சில வாசகர்கள், என்னோடு உண்மையான நட்பு கொள்ள விரும்பினர், ஆனால், பாவம் அவர்கள் தினசரி வேலை நேரம் போக என்னோட நேரம் செலவிட அவர்களுக்கு நேரம் இல்லை. ஆகையால், அவர்களும் விலகி சென்றனர்.
எனது பார்வையில், நேரம் கிடைத்தால் பேசுவது சாதாரண நட்பு, ஆனால் நேரத்தை உருவாக்கி பேசுவது தான் உண்மையான நட்பு. இதை உண்மையான நட்பை எதிர் பார்க்கும் என்னை போன்றோர் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள். அப்படி ஒரு உண்மையான நட்பை பற்றி தான் எனது முதல் உண்மை கதையில் கூறி இருந்தேன். ஆனால் இப்படி இரண்டாவது கதை எழுத்தும் வாய்ப்பு ஏற்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆம் என்னை விட்டு சென்ற என் உயிர் தோழியை இனி என் வாழ்வில் சந்திக்க மாட்டேன் என்று நினைத்திருந்தேன், ஆனால் அவளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு சென்ற மாதம் எனக்கு கிடைத்தது.
சென்னையில், ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தாள். ஒரு நாள் மாலை நேரம், ஒரு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. முதலில் அழைப்பை ஏற்று பேசினேன். மறுமுனையில் இருந்து எந்த பதிலும் இல்லை. அழைப்பை துண்டித்தேன். மீண்டும் 2 மணி நேரம் கழித்து அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. யார் என்றேன்… நான் தான் உன் உயிர் தோழி… என்றாள். எனக்கு மகிழ்ச்சியாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.
அவள் சென்னை வந்ததின் நோக்கம் மற்றும் உண்மையான நோக்கத்தை பற்றி கூறினாள். நோக்கம், திருமணத்தில் கலந்து கொள்வது, உண்மையான நோக்கம் என்னை சந்திப்பது.
தான் திருமண மண்டபத்தில் தங்கி இருப்பதாகவும், நாளை காலை திருமணம் முடிந்த பின்னர் மதியம் தொடர்வண்டியில் சொந்தவூர் திரும்புவதாகவும் கூறினாள். என்னை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்கவேண்டும், என்னுடன் நிறைய பேசவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தாள். எனக்கோ, விட்டு சென்ற தோழி திரும்பி வந்ததற்காக சந்தோஷப்படுவதா, இல்லை இது நிரந்தரம் அற்ற சந்திப்பு என்று தெரிந்தும் அவளை நாளை சந்திப்பதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
மறுநாள் என்னை திருமணமண்டபம் அருகில் உள்ள ஒரு வங்கி எ.டீ.எம் அருகில் காலை 9.30 மணி அளவில் காத்திருக்க சொன்னாள். மேலும் தான் அழைத்தது தன் தோழி அலைபேசி லிருந்தும், தன் அலைபேசி எண் இப்பொழுது தர இயலாது என்றும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள். எனக்கு சிறிது கவலையாகவே இருந்தது. அவள் என்னை முதன்முறை விட்டு சென்றதிலிருந்து மீளவே ஓராண்டிற்கு மேல் ஆயிற்று.
இப்பொழுது கண்டிப்பாக இது தான் எங்கள் கடைசி சந்திப்பு என்று தெரிந்தும் அவளை சந்தித்தே ஆகவேண்டுமா என பற்பல குழப்பத்தில் என் மனம் தத்தளித்தது. என் மனதை என்னதான் சமாதானம் செய்து கல்லாக்கினாலும், அவளை சந்தித்தவுடன் கரைந்துவிடும் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனக்கென இருந்த ஒரே உண்மை தோழி, ஏதோ குடும்ப சூழ்நிலையால் என்னை பிரிய நேர்ந்தது, அவள் என்னை ஏமாற்ற வில்லையே என்று என்னை நானே சமாதான படுத்தி கொண்டு மறுநாள் அவளை சந்திக்க தயாரானேன்.
மறுநாள் காலை ஒன்பது மணி அளவில் அவள் சொன்ன இடத்தை அடைந்தேன். மணி 9.20, அவள் வந்தாள். என்னை பார்த்ததும் வாய் புன்னகைத்து, ஆனால் அவள் கண்கள் கலங்கின. யாரும் பார்ப்பதற்கு முன்னர் வேகமாக என் கால்களை தொட்டு மன்னித்துவிடு சதீஷ், நான் செய்தது தவறு என்று தெரிந்தும் என்னால் என் குடும்பத்தை எதிர்த்து ஏதும் செய்ய இயலவில்லை. நான் உன்னைவிட்டு போகவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டேன் என்றாள். நான் உன்னைவிட்டு பிரிந்திருந்தாலும் உன்னை நினைக்காத நாள் இல்லை என்றாள். மதியம் 3 மணிக்கு எனக்கு தொடர்வண்டி உள்ளது. அதுவரை உன்னோடு தான் இருப்பேன் என்றாள்.
மணி அப்பொழுது 10, எங்களுக்கு இருந்தது 5 மணி நேரம். நான் அவளை திருமண மண்டபம் அருகில் சந்தித்து திரும்பி விடுவேன் என நினைத்தேன். ஆனால் அவள் தன் ஊருக்கு செல்லும் வரை என்னுடன் இருப்பாள் என்று எனக்கு தெரியாது. திடீரென்று அவளை எங்கு அழைத்து செல்வது, தூரமாக செல்லலாம் என்றால் நேரம் போதாது, அருகில் செல்லலாம் என்றால், யாரேனும் எங்களை பார்க்க நேர்ந்தால், என பலகேள்விகள் நடுவில், முதலில் ஒரு சிறிய உணவகம் சென்று காலை சிற்றுண்டி உண்டுகொண்டே யோசிக்க துவங்கினேன். அவள் திருமணத்திலேயே உண்டுவிட்டதால் ஒரு கோப்பை காபி மட்டும் அருந்தினாள். சிற்றுண்டி முடித்துவிட்டு நேரே என் இரு சக்கர வாகனத்தை பரங்கிமலை நோக்கி செலுத்தினேன். அங்கு ஜோடிகள் சந்திக்கும் இடத்தை அடைந்தோம். இருவரும் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்தோம். அவள் என் மார்பில் சாய்ந்தவாறு அமர்ந்தாள். இருவரும் பேச துவங்கினோம்.
என்னை மன்னித்துவிடு சதீஷ், என்னால் நம் நட்பை தொடர இயலவில்லை. இனியும் இயலாது என்பது தான் உண்மை. நாம் இப்பொழுது சந்தித்ததே ஒரு அதிர்ஷ்டம் தான். ஆனால், எல்லாநேரமும் நமக்கு அதிர்ஷ்டம் அமையாது. விதி படியே எல்லாம் நடக்கும். ஆனால், என் நட்பு உண்மை, உன்னை ஒருபோதும் நான் ஏமாற்ற நினைத்ததில்லை என்றாள். நான் எதிர் பார்த்த சொற்கள் தான், ஆகையால் நான் எந்த பதிலும் கூறவில்லை.
கருத்து எழுதுங்கள்